Thursday, February 24, 2011

டெல்லி:ஜாமிஆ மில்லியாவுக்கு சிறுபான்மை அந்தஸ்து

புதுடெல்லி,பிப்.23:டெல்லியில் ஜாமிஆ மில்லியா இஸ்லாமிய்யா பல்கலைக்கழகம் சிறுபான்மை அந்தஸ்து பெற்ற நிறுவனம்தான் என தேசிய சிறுபான்மை கல்வி கமிஷன் தீர்ப்பளித்துள்ளது.


முஸ்லிம் இடஒதுக்கீட்டிற்கு பதிலாக பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களுக்குத்தான் ஜாமிஆ மில்லியா இடஒதுக்கீடு வழங்கவேண்டும். இல்லாவிடில் பல்கலைக்கழகத்திற்கான மானியம் வாபஸ் பெறப்படும் என பல்கலைக்கழக மானியக்குழு(U.G.C) மிரட்டிக் கொண்டிருக்கும் வேளையில்தான் வரலாற்றுச்சிறப்புமிக்க இத்தீர்ப்பு வெளியாகியுள்ளது.
இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 30(1)- மற்றும் தேசிய சிறுபான்மை கல்வி கமிஷனின் சட்டத்தின் பிரிவு 2(g) ஆகியவற்றின் அடிப்படையில் ஜாமிஆவுக்கு சிறுபான்மை அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பை நீதிபதி எம்.எஸ்.எ

சித்தீக், மொஹிந்தர் சிங் மற்றும் சிரியாக் தாமஸ் ஆகியோரைக் கொண்ட போல்வு நீதியியல் அதிகார குழு(quasi judicial body) வழங்கியது.

முஸ்லிம் சமுதாயம் நடத்திய சட்டப் போராட்டத்தின் முடிவில் கிடைத்த நல்லதொரு தீர்ப்பாகும் இது.

ஜாமிஆ மாணவர் யூனியன், ஜாமிஆ ஆசிரியர்கள் சங்கம், முஸ்லிம் கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பு, ஜாமிஆ முன்னாள் மாணவர் அமைப்பு, ஷம்ஸ் பர்வேஸ், ஜாவேத் ஆலம் ஆகியோர் ஆதரவாகவும், ஜாமிஆ மில்லியா இஸ்லாமிய்யாவின் துணைவேந்தர், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், மத்திய சிறுபான்மை அமைச்சகம் ஆகியவற்றின் செயலாளர்கள்

எதிர் தரப்பினராகவும் புகார் அளித்தனர்.

இந்திய அரசியல் சட்டத்தின் 30(1) பிரிவின்படி ஜாமிஆ மில்லியா பல்கலைக்கழகத்தை சிறுபான்மை நிறுவனமாக அறிவிக்க வேண்டுமனக்கோரி 2006-ஆம் ஆண்டு ஜாமிஆ ஆசிரியர்கள் சங்கம்

முதன்முதலாக புகார் மனு அளித்தது. அதன் பிறகு இதர நபர்கள் கட்சிதாரர்களாக இணைந்தனர்.

இதற்கெதிராக பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளர் எஸ்.எம்.அஃப்ஸல் 2006 அக்டோபர் 13-ஆம் தேதி கமிஷன் முன்பாக ஆஜராகி எதிர் சத்தியப் பிரமாண வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் ஜாமிஆ சிறுபான்மை நிறுவனமல்ல என தெரிவித்திருந்தார். ஆனால், முதல் சத்தியபிரமாண வாக்குமூலத்திற்கு மாற்றமாக தற்போதைய பதிவாளர் பேராசிரியர் எஸ்.எம்.ஸாஜித் சமர்ப்பித்த சத்திய பிரமாண வாக்குமூலம் இவ்வழக்கில் திருப்புமுனையாக அமைந்தது. அவர் தனது சத்தியபிரமாண வாக்குமூலத்தில், மெளலானா முஹம்மது அலி ஜவஹரும், ஹக்கீம் அஜ்மல் கானும் இணைந்து முஸ்லிம் சமுதாயத்திற்காக 1920-ஆம் ஆண்டு நிறுவியதுதான் இந்நிறுவனம் என தெரிவித்திருந்தார்.

ஜாமிஆவின் பழையகால வரலாற்றை விளக்கும் சில நூல்களையும் இதற்கு ஆதாரமாக ஸாஜித் சமர்ப்பித்தார். இந்த சத்தியப்பிரமாண வாக்குமூலம்தான் ஜாமிஆவின் நிலைப்பாடு புகார் அளித்தவர்களுக்கு ஆதரவாக மாறியது என கமிஷன் சுட்டிக்காட்டியது.

ஒரு நிறுவனத்தின் மதரீதியான அடிப்படையில் சிறுபான்மை அந்தஸ்து அளிப்பதற்கு மூன்று விஷயங்கள் நிரூபிக்கப்பட்டிருக்க வேண்டும் என தீர்ப்பில் கமிஷன் விளக்கியுள்ளது.

1.அக்கல்வி நிறுவனத்தை நிறுவியது சம்பந்தப்பட்ட சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்த உறுப்பினர்களாக இருக்கவேண்டும்.

2.நிறுவனம் சிறுபான்மையினரின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

3.சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தை நிர்வகிப்பது சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்தவர்களாகயிருக்க வேண்டும்.

கடந்த 1962-ஆம் ஆண்டு 1956-ஆம் ஆண்டின் பல்கலைக்கழக மானியக்குழுவின் சட்டத்தின்படி பல்கலைக்கழகமாக ஜாமிஆ மாறியது.

பல்கலைக்கழகத்தின் பெயரிலுள்ள ஜாமிஆ, மில்லியா என்ற வார்த்தைகளே சிறுபான்மையினரின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது. மேலும் பல்வேறு கமிட்டிகளின் பெயர்களும் இதற்கு ஆதாரமாக சுட்டிக்காட்டப்பட்டன. ஜாமிஆவுக்கு நிலத்தையும், கட்டிடத்தையும் வழங்கியது முஸ்லிம் சமுதாயமாகும்.

ஜாமிஆவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபொழுது முன்னாள் ஜனாதிபதியான டாக்டர்.ஜாஹிர் ஹுஸைன் உள்ளிட்ட பேராசிரியர்கள் ஒன்று சேர்ந்து 150 ரூபா வீதம் அக்காலக்கட்டத்தில் சேகரித்துள்ளனர். நிறுவனம் தொடர்ந்து நடைபெற அஞ்சுமன்-இ-தஃலீமி என்ற பெயரில் அமைப்பை உருவாக்கி 1939-ஆம் ஆண்டில் அதனை ஜாமிஆ மில்லியா இஸ்லாமிய்யா என்ற பெயரில் பதிவும் செய்தனர்.

ஏற்கனவே சிறுபான்மை சமுதாயம் நடத்திக்கொண்டிருந்த நிறுவனத்தில் பின்னர் இதர சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் சேர்ந்துள்ளதால் அந்நிறுவனம் சிறுபான்மை அந்தஸ்தை இழந்துவிடாது என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பும் சுட்டிக்காட்டப்பட்டது.

செய்தி:மாத்யமம்

Wednesday, January 12, 2011

கமல்ஹாசனுக்குப் பகிரங்கக் கடிதம் மன்மதன் அம்பும், மதிகெட்ட வம்பும்

அன்புள்ள கமலஹாசன் அவர்களுக்கு,

தங்கள் மீது, ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் பொழியப்படவும், தாங்கள் நேர்வழி பெறவும், பிரார்த்தித்துக் கொள்கிறோம்.(மாற்றுக் கருத்துடையோர்க்கும் பிரார்த்திப்பது எங்கள் மரபு) வாசிப்பு வாசனையற்ற எத்தனையோ திரைக்கூத்தாடிகளுக்கிடையே, ஆழமான வாசிப்பாளராக, மனிதநேயராக, மதமாச்சரியம் அற்றவராக, சாதி கடந்தவராக, தங்களை அடையாளப் படுத்திக் கொள்கிறீர்கள். சினிமா, என்ற சக்திவாய்ந்த ஊடகத்தின் உச்சத்தில் இருக்கும் தாங்கள், சிதைக்கப்பட்டு, வதைக்கப்பட்டு, வாழ்வுரிமையே கேள்விக்குறியாக்கப்பட்டு வரும் ஒரு சிறுபான்மை சமுதாயத்தை மேலும், சிதைப்பதிலும், சீண்டுவதிலுமா உங்கள் கலைஞநானத்தையும், ஆற்றலையும் காட்ட வேண்டும்.



முஸ்லிம்கள் மீதான ஊடக வன்முறையின் உச்சகட்டமாக, உங்களது ‘உன்னைப்போல் ஒருவன்’ படம் அமைந்தது. தங்களை நேரில் சந்தித்து எங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தோம். சுமார் ஒரு மணிநேரம் நான் முஸ்லிம் எதிர்ப்பாளன் அல்ல என்று விளக்கினீர்கள்

‘கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த நன்றொன்று உள்ளக் கெடும்‘ (கொல்கிற அளவுக்குக் கொடுமை செய்தவரானாலும், அவர் செய்த ஒரு நன்மையை நினைத்துப் பார்த்து, மன்னிக்க வேண்டும், மறக்க வேண்டும், என்பார் வள்ளுவர்.)

‘உன்னைப்போல் ஒருவன்’ எங்களைக் காயப்படுத்திய படம் என்பது தான் இப்போதும் எங்கள் நிலை. ஆனால், பாபரி மஸ்ஜித் இடிப்பு நேரத்தில், மனிதநேயத்தோடு தாங்கள் வெளிப்படுத்திய கருத்துகளையும், மும்பை கலவரத்தின்போது அன்றைய பிரதமர் நரசிம்மராவை நேரில் சந்தித்து துணிவோடு குற்றம் சாட்டியதையும், நாங்கள் நினைத்துப் பார்த்தோம், நீங்களும் அதை நினைவூட்டினீர்கள்.

இப்போது, முதல்வர் கலைஞரின் பேரன் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் ‘மன்மதன் அம்பு’ வந்துள்ளது. உங்கள் அம்பு சரியாகவே பாய்ந்துள்ளது. அது தந்த வலிகளே இந்தக் கடிதம்..

‘அம்பு’ படத்தில் வாகன விபத்தில் இறந்துபோன உங்கள் முதல்மனைவி (ஜுலியட்) பற்றி, கதாநாயகியிடம் சொல்லும்போது, காஷ்மீரில் ‘லஷ்கர் இ தொய்பா’ பயங்கரவாதிகள் அந்தப் பெண்ணைக் கடத்தி வைத்திருந்ததாகவும், அவரை மீட்பதற்கு ராணுவ மேஜரான நீங்கள் இரண்டு வீரர்களை பலி கொடுத்ததாகவும் கூறுகிறீர்கள்.

என்ன சொல்ல வருகிறீர்கள் கமல்?

காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் வெளிநாட்டிலிருந்து அழகான பெண் வந்தால் கடத்தி வைத்துக் கொள்வார்கள். பெண்களைப் பெரிதும் மதித்து, துதித்துப் பெண்ணியம் போற்றும் (?) நமது பாதுகாப்புப் படையினர் கடத்தப்பட்டப் பெண்ணை உயிரைப் பணயம் வைத்து மீட்பார்கள்? என்று தானே சொல்ல வருகிறீர்கள்.

உங்கள் மீட்பர்களின் லட்சணத்தை உண்மை யிலேயே அறிந்துள்ளீர்களா? கமல்.

பேரா.அ.மார்க்ஸ், எழுதியுள்ள ‘காஷ்மீர் என்னதான் நடக்கிறது அங்கே, என்ற நூலைப் படியுங்கள்.

நட்சத்திர விடுதியில் குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து கொண்டு எழுதப்பட்ட எழுத்தல்ல அது, திகிலூட்டப்பட்ட காஷ்மீருக்கு, உண்மை அறியும் குழுவோடு நேரில் சென்று பார்த்த உண்மைகள் அவை.

காஷ்மீரில் தொடரும் துயரம் என்ற நூலையும் படியுங்கள்.

அருந்ததிராய், பேரா.கீலானி உள்ளிட்ட மனிதஉரிமைப் போராளிகளின் காஷ்மீர் குறித்த கருத்துகளை வாசியுங்கள்.

‘காஷ்மீரில் ஷோபியான் என்ற இடத்தில் முஸ்லிம் இளம்பெண்களை உங்கள் மீட்பர்கள் பாலியல் வன்மம் செய்து கொன்ற செய்தி எல்லா ஏடுகளிலும் தொடர்ந்து வெளிவந்ததே...

கலைஞானி அவர்களே.. கண்ணுறவில்லையா?

காஷ்மீரில், குறைந்தபட்சத் தண்டனையே மரண தண்டனைதான் என்பதையும், காஷ்மீரியாகப் பிறந்துவிட்டால், வாழ்க்கையே ஒரு தண்டனைதான் என்பதையும், இதற்கெல்லாம் காரணம் அந்த மீட்பர்கள் என்பதையும் அறியாமலா இருக்கிறீர்கள்? நிச்சயமாக அறியாமல் இருக்க மாட்டீர்கள் பிறகு ஏன்.?

லஷ்கர் இ தொய்பாவை திட்டினால் உங்களுக்கேன் வருத்தம்? என்று நீங்கள் கேட்கலாம். பாகிஸ்தான் என்ற நாசகர ஆக்ரமிப்பு சக்தியின் ஆதரவோடு காஷ்மீரில் இயங்கும் எந்த இயக்கத்தையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம். அதே நேரத்தில், தங்களது வாக்களிக்கப்பட்ட சுயநிர்ணய உரிமைக்காக உயிரைப் பணயம் வைத்துப் போராடிவரும் காஷ்மீரிகளை கொச்சைப்படுத்தவும் மாட்டோம்.

காஷ்மீரி என்றாலே அவன் ‘லஷ்கர் இ தொய்பா’வைச் சேர்ந்தவன் என்று முத்திரைக் குத்திதான் ‘மீட்பர்களின் துப்பாக்கிகள்’ அந்த அப்பாவியைப் பலியிடுகின்றன. காஷ்மீர்ப் பெண்களை அன்றாடம் சூறையாடுகின்றன.

காஷ்மீரிகளின் வீடுகளை இடித்துத் தகர்க்கின்றன. சந்தேகத்தின் பேரில் சிறுவர்களையும் கொன்று குவிக்கின்றன.

காஷ்மீரிகளை, இந்த மீட்பர்கள் பொது இடங்களின் வைத்து பெண்களைப் பாலியல் வன்முறை செய்தாலும், அப்பாவிகளைப் படுகொலையே செய்தாலும் யாரும் கேட்க முடியாது.

மீட்பர்களை இப்படி ரட்சிக்கிறது ராணுவத்திற்கான சிறப்பு அதிகாரச் சட்டம். மாநில அரசு கூட இந்த சீருடைப் பயங்கர வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. மத்திய அரசின் அனுமதி பெற்றுத்தான் நடவடிக்கை எடுக்க முடியும். சீருடைக் கொடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அனுமதி அளிப்பதில்லை. 2009ம் ஆண்டு மட்டும் 350 முறை காஷ்மீர் மாநில அரசால் அனுமதி கேட்கப்பட்டு மத்திய அரசால் மறுக்கப்பட்டுள்ளது. இந்த அவலங்களையெல்லாம், சக்திவாய்ந்த ஊடகத்தின் சகலகலா வல்லவர்கள் வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

ஃபாரன்ஹீட் 9/11 போன்ற படம் எடுக்கும் கலைஞர்களும், ஹிட்லரையே மிரளவைத்த திரைக்கலைஞர் சார்ளி சாப்ளினும் தமிழகத்தில் இல்லையே...

மத்திய அமைச்சராக இருந்த முப்தி முகமது சயீதின் மகள் கடத்தப்பட்டதைப் பின்புலமாகக் கொண்டு உங்கள் மருமகன் மணிரத்னம் ‘ரோஜா’ படம் எடுத்தார். காஷ்மீரிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி பொதுப் புத்தியில் பதிய வைத்தார்.

அன்றாடம் நூற்றுக்கணக்கான காஷ்மீர் இளம் பெண்கள் பாதுகாப்புப் படையால் கடத்தப்பட்டு, சிதைக்கப்படுகிறார்களே உங்கள வர்கள் அதைப்படமாக எடுத்த துண்டா?

நீங்கள் கறுப்பு சட்டைக்காரராகவும், இருக்கிறீர்கள், சமயத்தில் சிவப்புச் சிந்தனையும் பேசுகிறீர்கள். கறுப்பு, சிவப்போடு சேர்ந்தும், காட்சி தருகிறீர்கள், படமும் தருகிறீர்கள்.

யாரும் விரும்பிய வண்ணத்தை எங்கள் மீது பூசுவதற்கு வசதியாக நாங்கள் வெள்ளையாக, வெள்ளந்தியாக நிற்கிறோம்.

குடிபோதையின் உச்சத்தில் மகன் அம்மாவுக்கு தொலைபேசி.. நீங்கள் ஜீனியஸ், நாஸ்ட்ரா டாமஸ், கருநாக்கு தேவதை என்கிறான். அதற்கு அம்மா, “பார்ல இருக்கியா, போறுண்டா சாப்டது, வீசிங் வந்துரும், ஆத்துக்கு வந்துடு” என்கிறார்.

சிவப்புச் சிந்தனையாளரான மாவோ, சீனாவில் செய்தது கலாச்சாரப்புரட்சி, அன்பே சிவம் படத்தில் காம்ரேடாக ‘சிவப்புச் சிந்தனை’ பேசிய நீங்கள் ஒரு புதிய கலாச்சார புரட்சியைத் தமிழகத்தில் விதைக்கிறீர்கள்...

‘கட்டிக்கப் போறவனுக்குக் கடுக்காக் கொடுக்கும் பெண்களால்தான், சுனாமி, பூகம்பம், சூறாவளியெல்லாம், வருதுன்னு, இரான் நாட்டு இமாம் சொன்னதாக, உங்கள் குடிகாரக் கதாநாயகன் பேசுகிறார், ‘இதையே தான் எங்க அம்மாவும் சொன்னாங்க” என்கிறான் நண்பன், ‘உங்க அம்மா இமாமா? என்கிறார் கு.கா. ஹீரோ....

இரான் நாட்டு எந்த இமாம் இப்படி சொன்னார் என்பது கதை வசனம் எழுதிய கலைஞானிக்கே வெளிச்சம். இரான் நாட்டு இமாம் அல்ல, ஈஞ்சம்பாக்கத்து இமாமைக் கேட்டால் கூட ‘குடிப்பழக்கம் தான் பாவங்களின் ஊற்றுக்கண்” என்பார்.

இரான் நாட்டு இமாமின் கருத்தையெல்லாம் கவனித்து எழுதிய கலைஞானி(?)க்கு காஷ்மீர் மக்களின் கண்ணீரையும், கதறலையும், கண்டு கொள்ள முடியவில்லை என்பதுதான் வேதனை.

உங்களிடம் மானுடநேயத்தை விட ராணுவ நேயம் விஞ்சி நிற்கிறது. ஜெய்ஹிந்த் கொலைகாரத் துப்பாக்கிகள் நடத்துகிற ஷுட்டிங்காக இருந்தாலும், கலைகாரக் கேமராக்கள் நடத்துகிற ஷுட்டிங்காக இருந்தா லும், விளைவு என்னவோ ஒரே மாதிரிதான் இருக்கிறது...
-ஹாஜாகனி
Source:www.tmmk.in